சென்னை: ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறியதுடன், அவரது மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் குறிப்பில், “ அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பேரிழப்பை எப்படித் தாங்குவார் என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறேன். எல்லோருக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரிக்கு இப்படி ஒரு துயரம் இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை கொடு என்று பிரார்த்திக்கிறேன்.மறைந்த அண்ணியார் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்தில் நான் சந்தித்த போதெல்லாம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உயர்ந்த உள்ளத்துடனும் என்னை உபசரித்தது நினைத்து, அந்த நல்ல இதயம் நம்மை விட்டு பிரிந்தது என்று வேதனைப் படுகிறேன்.