சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானதையடுத்து, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி வகித்தவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய துணை எதிர்க்கட்சித்தலைவருமான ஓபிஎஸ்-ன் மனைவி விஜயலட்சுமி கடந்த ஒரு வாரமாக உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக, காலை 6.45 மணிக்கு  காலமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனே மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி  விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அங்கிருந்த ஓ.பி.எஸ்சின் முதுகில் தட்டிக்கொடுத்து முதல்வர்  ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார். முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள துரைமுருகன்,தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏ முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினரும் உடனிருந்தனர்.