சென்னை

ந்து அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் பணி புரிய இந்து மத்தவர்கலை மட்டுமே நியமிக்க முடியும் எனத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்   பணியிடங்களுக்கு  விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை சார்பில் அக்டோபர் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

சம்மந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ளத் தகுதி இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவர், ”தமிழை தாய் மொழியாகக் கொண்ட எனக்குத் தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது.  இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது  இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

நீதிபதி சரவணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தவிர இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மேலும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளார்.