சென்னை: நவம்பர் மாதம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதும்,  சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வகுப்பு ஒன்றுக்கு 20 மாணாக்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துஉள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.

மேலும், சின்ன வவகுப்பு மாணவர்கள் வெகுநேர முகக்கவசம் அணிய முடியாது என்பதால்,  அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியவர்,  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அமோகமாக உள்ளது. சென்னையை பொருத்தவரை ஒவ்வொரு வகுப்பிலும் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் உள்ளனர். ஆனால், போதிய அளவு வகுப்புகளைகோ, கட்டிடங்களோ இல்லை. இந்த சூழலில் ஒரு வகுப்புக்கு 20 மாணாக்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றால், அந்த வகுப்பு மாணாவர்கள் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே பள்ளி வரும் சூழ்நிலை ஏற்படும். அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.