சென்னை: ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்படுவது, 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுபரவல் முழு ஊரடங்கு காரணமாக, கல்வி நிலையங்கள் இதுவரை திறக்கப் படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு  வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் வகுப்பால் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது என்று பல மாணாக்கர்கள் குற்றம் சாட்டும் நிலையில், சிலர் தற்கொலை முடிவையும் நாடியுள்ளனர்.  இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில்  உள்ளன.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டை யன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாகவும், ஐந்து நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.