சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை , ஒரு வாரம், தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும் என பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க‘.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் விதி 110ன்கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழாக் கொண்டாடப்படும்.
நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும்.
செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும்
தமிழ் மொழியையும் பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் கவிஞர் ஒருவருக்கு, பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு அரங்கங்கள் நடத்தப்படும்.
தமிழ் மொழிகளின் பெருமைகளை எடுத்துரைக்க பள்ளிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கள் நடைபெறும்.
செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். நாம் அணைவரும் இணைந்து தமிழ் மொழியை உயர்த்துவோம்”‘
இவ்வாறு கூறினார்.