சென்னை: மறைந்த புற்றுநோய் மருத்துவரான டாக்டர் சாந்தாவின் சிலையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக அறையையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நயனொடு நன்றி புரிந்த பயனுடையாரின் பண்பு பாராட்டுவோம்! மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உலகம் முழுவதும் இருந்து வந்து, ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் பெரும் வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர் மறைந்த மருத்துவர் சாந்தா. இவர் 1980ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனையை உலகளவில் பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன் பெறும் மையமாகவும் மாற்றினார். சுமார் 1,000 மருத்துவ பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் அடையாறு மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் இடமாக மாற்றி சாதனை படைத்தவர்.
கொரோனா காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும், எந்த மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும், எந்த நோயாளிக்கும் சிகிச்சை தருவதில் தடங்கல் இருக்கக்கூடாது என அயராது பாடுபட்ட மருத்துவர் சாந்தா, தமிழக அரசின் திட்ட குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவரது பங்கு அளவிட முடியாதது, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ சஞ்சிகைகளில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் ஔவையார் விருதையும் பெற்றுள்ளார். இவர் தனது 93வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக, 2021ம் ஆண்டு, ஜனவரி 19ந்தேதி அன்று காலமானார்.
இவ்வாறு புகழ்பெற்ற மருத்துவர் சாந்தாவின் சிலை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் முன்னோடி நிறுவனர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு எளிமையான பயணமாகத் தொடங்கியது, டாக்டர் வி. சாந்தா புற்றுநோயியல் துறையில் ஒரு உயர்ந்த நபராக மாறியதால் அசாதாரண சேவை செய்யும் நிறுவனமாக மலர்ந்தது.
இன்று, டாக்டர் சாந்தாவின் சிலை மற்றும் அருங்காட்சியகத்தை அவர் தனது முழு வாழ்க்கையையும் ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்த இடத்தில் திறந்து வைத்தேன். அவரது உடைமைகள் மற்றும் இலட்சியங்களால் நிரம்பிய அந்த அருங்காட்சியகம் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்து, ஊக்கப்படுத்தியது,