சென்னை: கேரள மாநிலத்தின் சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி கேரள மாநில மலையாள மக்களுக்கு தமிழக  ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தமிழக கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும், இந்த மகிழ்ச்சியான ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் அர்ப்பணிக்க உறுதியேற்போம் என வாழ்த்தியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  மகாபலி சக்ரவர்த்தி யின் வரலாற்றை குறிப்பிட்டு, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இத்திருவோணத் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. தீரமும், ஈரமும் மிகுந்த “மகாபலி” சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்ற வற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது. இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி – அந்த 10-வது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது.

தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்வுகளையும் மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து, 2006-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். பிறகு தமிழ்நாடு மலையாளி சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து – தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்தவர். பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் – திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும் – கேரள மக்கள் அனைவரும் – ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.