சென்னை:

பேஸ்புக் மூலம் ஏற்படும் வில்லங்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் செல்பி மோகம் உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வீட்டு மாடியில் கஞ்சா செடியை வளர்க்கும் போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்டார் ஒரு வாலிபர். இது வைரல் ஆனதால் அந்த வாலிபரும், அவரது நண்பரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்ந்த சசிகுமார் (வயது 22) கஞ்சா செடி வளர்க்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார். இது வைரல் ஆனது. இதனால் போலீசார் இவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவை சேர்ந்த நண்பர் கமல் வீட்டின் மொட்டை மாடியில் பூந்தொட்டியில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது.

சசிகுமார் கொடுத்த தகவலின் படி கமலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கஞ்சா வளர்த்து அதை சிகரெட்டில் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கமல், சசிகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் கடந்த வாரம் சென்னை கே.கே.நகரில் வீட்டின் மாடியில் கஞ்சா வளர்த்த சார்லஸ் பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.