சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும்  தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் அனைத்து இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கி விட்டது. நெல்லை – மதுரை நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இன்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.  மேலும் 30க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

இதனிடையே தென்மாவட்டங்களுக்கு நேற்று கிளம்பிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணித்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிளம்பிய பேருந்துகள் அங்கே நெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மழை காரணமாக  50 சதவிகிதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட் நிலையில், இன்று சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கிடையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களுக்கு  தேவையான அளவுக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.