சென்னை: கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து இன்று தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 1ந்தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தமிர்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதையடுத்து, இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது.  இதையடுத்து, ஆம்னி பஸ் போக்குவரத்தும் தொடங்குவதாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய ஆம்னி பேருந்து சங்க நிர்வாகி அன்பழகன்,  தமிழகத்தில் தினசரி  4 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா  ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஆம்னி பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பம் வருவாய் இழந்துள்ளனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, பேருந்து சேவைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளதால், ஜூலை 1-ந் தேதி தனியார் பேருந்துகள் முதல் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருசில பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும். அனைத்து பஸ்களும் ஜூலை 1-ந் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக  ஆம்னி பஸ்களை தற்போது இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது.  எங்களது பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெரும் வகையில் பஸ்களை இயக்கப்போவதில்லை என்று ஏற்கனவே போக்குவரத்து துறைக்கு தெரிவித்துள்ளோம். அதனால் இந்த மாதம் (ஜூன்) முழுவதும் பேருந்துகளை இயக்காமல் இருந்தால்தான் வரிவிலக்கை பெற முடியும். அதனால்தான் ஜூலை 1ந்தேதி முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.