நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா..
எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது
ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர் கோபி சாந்தா.
டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.. அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை.
கடைசியில் திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்..
தொடர்ந்து துண்டு ரோல்களே … இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்..
கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்டவரை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ அதிபர் சுந்தரம்தான். இதனால் கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக புரமோஷன் கிடைத்தது.. இத்துடன் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகி.
அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கலாம்.ஆனால் தமிழ்திரையுலகின் அதிர்ஷ்டம், மனோரமாவை நகைச்சுவை பாதைக்கு மாற்றி பெரும்பாலான தமிழ்ப்படங்கள் துவம்சம் செய்யவைத்துவிட்டது.
இல்லையென்றால் காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கமுடியுமா?..
மனோரமா நடித்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தபெருமை என்பது சாதாரண விஷயமா
சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என காமெடி உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அனைவருக்கும் நடிப்பில் ஈடுகொடுத்த ஒரே காமெடி பெண் திலகம் மனோரமா மட்டுமே..
இந்த திறமையால்தான் தேங்காய் சீனுவாசன், சுருளிராஜன் என அடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்தாலும் அவர்களுக்கும் இவர்தான் கதி என்ற கட்டாய நிலையை உருவாக்கி கொடிகட்டி பறக்கமுடிந்தது..
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏபி நாகராஜன் புக் செய்தபோது மனோரமாவுக்கு, கேரக்டர் பெரியதாக ஒன்றுமில்லையே என்கிற வருத்தம். ஆனால் ஏபிஎன் சொன்ன வார்த்தைகள்
”மோகனாவுக்கு ஆடத்தெரியும். சண்முக சுந்தரத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். ஆனா உனக்கு மட்டுமே இது ரெண்டும் தெரியும். அதுக்கும்மேல கள்ள பார்ட் வேஷமெல்லாம் போட்டு பாடவும் தெரியும்.
படத்திலேயே நீதான் சகலகலாவல்லி. அதனால் ஜில்ஜில் ரமா மணி கேரக்டர் பவர்புல் ஆனது. உங்கள் ஃலைப்பையும் தாண்டி பேசப்படும்”
ஏபிஎன் வாக்கு அப்படியே பலித்தது.. சிவாஜி, பத்மினி, நாகேஷ் போன்றோரே வியக்கும் அளவுக்கு அந்த பாத்திரத்தை துவைத்து எடுத்தவர் ஆச்சி
அதனால்தான் ஜில் ஜில் ரமாமணியை உலகமே பல்லாயிரம் தடவை பாராட்டி பாராட்டி சலிக்காமல் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கிறது.
சிவாஜியை வைத்து ஒன்பது வேடங்களில் எடுத்த நவராத்திரியில் பைத்தியம் வேடத்தில் மனோரமா பின்னியதை மறக்காமல்.. பின்னாளில் கண்காட்சி படத்தில் ஒன்பது வேடங்களில் மனோரமாவை வரவழைத்து அழகு பார்த்தார் ஏபி நாகராஜன்
வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜுட் விடும் கமலை தன் பக்கம் லேசாக இழுக்கப்பார்க்கும் சபலிஸ்ட் விமானப்பணிப்பெண் பாத்திரம்…பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பாட்டியாகவே முழுதாக தாங்கிய அந்த கெத்து… கம்னு கெட என்ற ஒற்றை டயலாக்கில் மற்ற பாத்திரங்களை மூட்டைக்கட்டிபோட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா, கொஞ்சம் பிசகினாலும் விரசமாகப்போகக்கூடிய அளவில் நடிகன் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த பேபிம்மா ரோல், அருந்ததியில் அனுஷ்காவுக்கு நிகராக தனது சந்திரம்மாவை அவர் உயர்த்திக்காட்டிய சாகசம் என அவரால் கிடைத்த சாகா வரம் பெற்ற பாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை..
அமரர் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, தாம் கேட்டதிலேயே வியப்பான குரல் மனேரமாவினுடையது என்று..
வா வாத்தியார வூட்டான்டே பாடல் படு காமெடி என்றாலும் பால முரளி, அந்த பாடலை அக்குவேணிவேறாக தனது குரலால் ஏற்ற இறக்கங்களை பாடி விவரித்தபோதுதான் மனோரமாவின் இசைப்புலமை புரிந்தது..
உனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடி நடித்த மஞ்சக்கயிறு.. தாலி மஞ்சக்கயிறு… பாடல் பட்டி தொட்டியெல்லாம் எல்லா விழாக்களிலும் தவறாமல் ஒலித்தது..
நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை. வேட்டைக்காரன், அன்பேவா, பொம்மலாட்டம், எதிர்நீச்சல், கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா என அவர் வெளுத்துக்கட்டிய படங்கள்தான் எத்தனையெத்தனை?
அனைத்து மட்ட பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தவர் மனோரமா. அதனாலேயே பெண்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.
இன்று ஐந்தாமாண்டு நினைவு தினம்