மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒரு பெங்காலி புலி என்றும், தனது தற்போதைய நிலைமைக்கு ஊடகங்களே காரணம் என நினைக்கும் ரியா,  ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது விசாரித்து வந்தது. இந்த தற்கொலையுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தபோது, சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் சுமார் 28 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு தற்போது ஜானினில் வெளியே வந்துள்ளார்.  அவரது பாஸ்போர்ட்டை விசாரணை நிறுவனத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் கேட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யவும் ரியா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில்  அவரது காதலி ரியா பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் மீது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரியா,  சூனியக்காரி என்றும் பணத்திற்காக சுஷாந்தை அவர் பயன்படுத்திக் கொண்டார், காதலிப்பதாக நடித்து  ஏமாற்றிவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வெளியாகி அவர் மீதான மதிப்பை குறைந்து வந்தன.

மேலும், அவருக்கு ஜாமின் கிடைக்குமா? எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும், இவர்தான் குற்றவாளி, சுசாந்த் சிங்கை கொலை செய்தவர் இவர்தான் என பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. கடந்த சில நாட்களாக ஊடகங்களால் ரியாவும், அவரது குடும்பத்தாரும் மனரீதியான துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராகக் கண்டனங்களும் வலுவாக எழுந்துள்ளன. ஊடகங்கள் இதில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் சதீஷ் மனிஷிண்டே, ரியாமீது அவதூறுகளை பரப்பிய ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். “பல்வேறு சேனல்கள், பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக உலகில் பல்வேறு மோசடிகளால், ரியாவுக்கு  எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோத, தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராட நாங்கள் விரும்புகிறோம் என்றும், அதை சட்டத்தின்மூலம் எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடகங்கள் அவர்மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது, ஆனால், அவர்  ஒரு போராளி, அவள் ஒரு புலி, அதுவும் அவர் ஒரு பெங்காலி புலி என்று கூறியவர், ஊடகங்களின் பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து  போராடுவார், என்றார்.

மேலும்,  “அவளுடைய பெயரும் நற்பெயரும் அப்படியே உள்ளன. அவளுடைய லட்சியத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் கெடுக்க முயன்ற முட்டாள்கள் அனைவரிடமும் அவள் போராடுவாள், உண்மை நிலைநாட்டுவாள் ” என்றும் தெரிவித்து உள்ளார்.