நெட்டிசன்:
500 , 1000 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அல்லாடி வருகிறார்கள். கையில், பையில் பணமிருந்தாலும், காய்கறி வாங்க முடியவில்லை, பால் வாங்க முடியவில்லை என்ற கூக்குரல் எங்கும் ஒலிக்கிறது.
அதுவும் வெளியூர் பயணிகள் பாடு படு திண்டாட்டம்.
அறியாத ஊர், தெரியாத மனிதர்கள், செல்லாத பணம்… என்னதான் செய்வார்கள் அவர்கள்?
அவர்கள் மட்டுமா.. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், அவர்களது உறவினர் என்று எல்லோருக்கும் சிக்கல்தான்.
இந்தத் துயரத்தைப் போக்க தன்னாலான முயற்சியை… ஆனால், உலகம் போற்றும் முயற்சியை எடுத்திருக்கிரார் கோவி என்கிற கோவிந்தராஜன்.
நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி உணவகத்தின் அதிபர் இவர்.
“பணம் தர வேண்டாம் எங்கள் உணவகத்தில் வயிறார சாப்பிடுங்கள். பிறகு வரும்போது கொடுங்கள்” என்று போர்டு வைத்துவிட்டார். ஓட்டல் முன்பு மட்டுமல்ல ரயில், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை வாசல்களிலும்!
கடந்த 9 மற்றும் பத்தாம் தேதிகளில், செல்லும் நோட்டு அல்லது சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.
இது பற்றி ஹோட்டலின் உரிமையாளரான கோவி என்கிற கோவிந்தன், “‘திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஏ.டி.எம்
மையங்களும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவும் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகளுக்காகவும் பணம் கொடுக்காமல் சாப்பிடுங்கள் என்று அறிவிப்பு வைத்தேன்” என்றார்.
இந்த விவரம், சமூகவலைதளங்களில் பரவ, தொடர்ந்து கோவி என்கிற கோவிந்தராஜனுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
நாமும் பாராட்டுவோமே!