சென்னை: உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள் என சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி செல்லும் தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மெட்ராஜ் உயர்நீதிமன்ற நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி பதவி உயர்வு பெற்றார். சுமார் 11 மாதங்களே அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பல அதிரடி தீர்ப்புகளை கூறிய நிலையில், திடீரென, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது. 75 நீதிபதிகள் உள்ள சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து 4 பேர் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்,  சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து,  சஞ்சீப் பானார்ஜி, வழக்கமாக நடைபெறும்  பிரிவு உபச்சார விழா எதிலும் பங்கேற்காமல்,  தன்னுடைய காரிலேயே சாலை மார்க்கமாக  கொல்கத்தா புறப்பட்டு சென்றதாககூறப்படுகிறது.

முன்னதாக அவர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நீதிமன்றம் நலனுக்கானது.

என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போய் இருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத் துறைக்கு நன்றி. சொந்த மாநிலம் என்று  தமிழகத்தை 11 மாதமாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே  விடைபெறுகிறேன்.

இனிய நினைவுகளுடன் புறப்படுகிறேன். நன்றி வணக்கம் என தெரிவித்துள்ளார்.