பிரேசில்: :மூன்று முறை ஃபிபா உலக கால்பந்து கோப்பையை வென்று சாதனை படைத்த பிரபல கால்பந்து வீரர் பீலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு உலக தலைவர்கள், கால்பந்து மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் கோல்கீப்பரான செபாஸ்டியோ லூயிஸ் லூரென்சோ என்பவர் பீலேவின் மறைவைத் தொடர்ந்து தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பதிட்டுள்ள டிவிட்டில்,  பீலேவின் பெனால்டியை காப்பாற்ற எந்தவொரு கோல்கீப்பருக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று தெரிவித்துள்ள 81 வயதான முன்னாள் கோல்கீப்பர், செபாஸ்டியோ லூயிஸ் லூரென்சோ, 1971ம் ஆண்டு மே 12ந்தேதி அன்று  நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, பீலே அடித்த பெனால்டியை தான் தடுத்து அணியை காப்பாற்றியதாக நினைவு கூர்ந்துள்ளார்.

அதுதொடர்பாக அந்த கால்பந்தில், பீலேவின் கையெழுத்து பதியப்பட்ட பந்துடன் கூடிய புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.

மேலும், பீலேவின்  உதையை தடுத்த, தற்போதுவரை உயிருடன் இருக்கும்  ஒரே கோல்கீப்பர்  செபாஸ்டியோ லூயிஸ் லூரென்சோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரும் பீலே போன்று தனது 15வது வயதில் கால்பந்து ஆட்டத்தில் குதித்தவர் என்பதும் இருவருக்கும் இடையேயான ஒற்றுமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவரான கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்  காலமானார்.

பிரேசிலில் 1940ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி Tres Coracoes நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீலே. ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையுடன் கால்பந்தாட்டத்தை வெகுவாக ரசித்திருக்கிறார். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த காலகட்டத்திலேயே ரேடியோ கமென்ட்ரி மிகவும் பிரபலம்.

1950ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதை ரேடியோவில் கேட்டு தனது தந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத பீலே, கவலைப்படாதீங்கப்பா நான் பிரேசிலுக்காக விளையாடி கோப்பையை வசப்படுத்துவேன் என சூளுரைத்தார் அந்த 9 வயது சுட்டிச்சிறுவன் பீலே. தந்தையிடம் அளித்த சபதத்தை நிறைவேற்ற குடும்ப வறுமையை மீறி, ஷூ பாலிஷ் போட்டும், டீக்கடையில் வேலை செய்தும் சிரமப்பட்டு, சரியாக 8 ஆண்டுகளில் 1958ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றார்.

காலிறுதிப் போட்டியில் பம்பரமாய் சுழன்ற பீலே, அரையிறுதியில் பிரான்சுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து வியக்க வைத்தார். இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பிரேசில் அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து 1962, 1970ம் ஆண்டுகளில் பீலே பங்கேற்று மொத்தம் 3 உலகக் கோப்பையை பிரேசிலுக்கு பெற்றுத் தந்து உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் பீலே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடிய பீலே, 77 கோல்களை அடித்துள்ளார். கிளப் அணிகள் உட்பட முதல்தர கால்பந்து போட்டிகளில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை ஆயிரத்து 282. அவர் கால்பந்தாடி அரைநூற்றாண்டு கடந்த பின்னரும் அவரின் புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எப்போதும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.