சென்னை:

மிழகத்தில்  வடகிழக்கு பருவமழை  வருகிற 20 -ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் தெரிவித்து உள்ளார்.

தென்மேற்கு பருவமழை முடிவடையும் நிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று தெரிவித்த சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன், தென்மேற்கு பருவ மழை வடஇந்தியாவில் விலகுவதற்கான அறிகுறி தொடங்கி விட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம். வருகிற 20-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20- ந் தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது என்றும் கூறினார்.

நடப்பு ஆண்டில்,தென்மேற்கு பருவமழை ஜூன் 8- ந் தேதி தொடங்கி  தற்போது வரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் உள்பட கேரளாவையும் புரட்டி போட்டது. அதுபோல,  தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு  தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 689 மி.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி- 931 மி.மீ., தர்மபுரி -763, வேலூர் -748, சேலம்- 732, புதுச்சேரி- 588, சென்னை நகரம்- 493, திருப்பத்தூர் -541, கட லூர்- 512 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையை விட அதிகமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.