சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதிலும், கரும்பு கொள்முதல் செய்வதிலும்  அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தமிழகஅரசு நடப்பாண்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பச்சரி, வெல்லம் மற்றும் கரும்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரும்பு கொள்முதல் உள்பட டோக்கன் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான,  நியாய விலைக் கடைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வழங்குவதில் எங்கேயும் அரசியல் தலையீடு இல்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், , கரும்புக்கு அரசு ரூ.33 என நிர்ணயித்துவிட்டு, விவசாயிகளுக்கு வெறும் ரூ.18 மட்டுமே வழங்குப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பியதற்கு, கோபத்துடன்,  பதிலளித்த அமைச்சர்,  “எந்த ஊரில் விவசாயிகள் இவ்வாறு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்? என எதிர்கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியில் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.30 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இந்த விலையை ரூ.33 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார். 10 சதவீத விலையை உயர்த்திக் கொடுத்துள்ளார் என்றவர் கரும்பு, மதுரை மாவட்டம் மேலூரில் அதிகமாக விளைகிறது. இங்கிருந்து கரும்பை வெட்டி நீலகிரிக்கு கொண்டுபோவதாக வைத்துக்கொள்வோம். வெட்டுக்கூலி, கட்டுக்கூலி, லாரியில் ஏற்றும் கூலி, லாரி வாடகை இருக்கிறது. பிறகு நீலகிரியில் கொண்டு சென்று ஒரு இடத்தில் மொத்தமாக கரும்பை இறக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர், ஊட்டி என 3 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு தனித்தனி லாரியைப் பிடித்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கெல்லாம் லாரி வாடகை இருக்கிறது.

இதுபோன்ற எல்லா செலவினங்களையும் கழித்து, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காகத்தான், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரும்பு விலையை நிர்ணயம் செய்கிறார். இதில் எந்த அரசியல் தலையீடும், இடைத்தரகர்களும் இல்லை என தெரிவித்தார்.