சென்னை

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சட்டசபையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்க ஆளுநர் சமீபத்தில் அம்மாநிலச் சட்டசபையை திடீரென முடக்கி வைத்து உத்தரவிட்டார்.    ஏற்கனவே அவருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நடக்கும் பனிப்போரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.   இதற்கு எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் விரைவில் தமிழக சட்டசபையை ஆளுநர் முடக்குவார் என்னும் தொனியில்  பேசி உள்ளார்.  இதற்குத் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது பேட்டியில்,

“சட்டசபையை முடக்க முடியாது.  அந்த அதிகாரம் யாருக்கும் கிடையாது.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சட்டசபையை முடக்குவது எளிதான காரியம் இல்லை. 

ஈபிஎஸ்,. ஒபிஎஸ், பாஜக தலைவர்கள் கூறுவது போல் நடக்காது.  வரும் 2024 ஆம் வருடம் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறும்.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்தான்.  இவை எல்லாமே அர்த்தமில்லாத பேச்சுக்கள். ஆகும்.”

எனத் தெரிவித்துள்ளார்.