சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் போல வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பணி செய்ய முடியாது. மாசு இல்லாமல் செயல்படுகிறார்  என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்த விவாதத்தின்போது பேசிய பாஜக எம்எல்ஏ, சரஸ்வதி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் நல்ல முறையில் பணி செய்து வருகிறார். மக்கள் நல்வாழ்வு துறை மூலம்,  மாசு இல்லாமல் அவர் சேவை செய்து வருகிறார். அமைச்சர் மா.சு போல வேறு யாரும் செய்ய முடியாது என்று புகழாரம் சூட்டினார்

மேலும், பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டம் உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் எனவும், மிகக்குறைந்த விலையில் மருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் கிடைப்பதாக தெரிவித்துடன், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருப்பதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை மருத்துவமனைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனை பாஜக எம்எல்ஏ புகழ்ந்து பேசியது சட்டமன்றத்தில் பெரும் வரவற்பை பெற்றது. அவரது சிறப்பான பணிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை யாரும் மறுக்கவோ, மறந்துவிடவோ  முடியாது.