சென்னை

விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு தற்போது அவசியம் இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார்.

முந்தைய அதிமுக அரசில் பல திட்டங்கள் அம்மா என்னும் பெயரில் தொடங்கப்பட்டன.  குறிப்பாக அம்மா மினி கிளினிக், அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடிகள் எனப் பல தொடங்கப்பட்டன.  இவை அனைத்தையும் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்து வந்தது.

இன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, தொடர்ந்து அதைச் செய்து வருகிறார்.  குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் தினந்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், மருந்துகள் அளிப்பதுமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  நிதிநிலை கூட்டத்தொடரில் 110 அறிவிப்புகள் மருத்துவத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டது.

அவற்றில் மிகவும் பிரதானமான திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு இத்திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2011-க்குப் பிறகு கடந்த ஆட்சியாளர்களால் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி நாளை (29-9-2021) சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 1000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தற்போது அம்மா மினி கிளினிக்கிற்கு அவசியம் இல்லை. அம்மா மினி கிளினிக்கை முன்னாள் முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இவை எல்லாம் விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவை.  மேலும் அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். அவை ஆரம்பித்ததோடு சரி, இப்போது அவை இயங்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.