கரூர்: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கபட மாட்டது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மின் இணைப்புடன் ஆதாரை  இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டதுடன், இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இதற்கான காலவகாசம்  இனிமேல் நீட்டிக்கப்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த  நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை  மின்இணைப்புடன் இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும். அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என்றவர், மொத்தமுள்ள 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.