சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது’ என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

முன்னதாக கோடை காலத்தில் மின்சார தேவை குறித்து சட்டப்பேரவையில்  அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். பின்னர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது, கோடை காலத்தில் தேவைப் படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது எழுந்துள்ள நிலக்கரி பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டு இருப்பதாகவும், அதற்கான நிலக்கரி  ஓரிரு நாளில் வந்துவிடும்.

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு சீராக உள்ளது.  ஆனால், மின்தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது எனத் தெரிவித்தார்.