சென்னை:

மிழகத்தில் நடைபெற்ற  31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற்ற ஒரு வழக்கறிஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக வழக்கறிஞர்களின் அறிவுத்திறன் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது…

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக  இருந்த பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி காலியாக இருந்த 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதில் கலந்துகொள்பவர்கள் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

முதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு இரு கட்டமாக தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7ந்தேதி நடைபெற்றது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து  3,562 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தற்போது தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்வு எழுதியவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வில், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்த நிலையில், தேர்ச்சி பெறாததற்கு இதுவே காரணம் என்ற கூறப்படுகிறது.

தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்ணாக 150க்கு 13.5 மார்க் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.