சென்னை: தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது என சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை கல்லூரி படிப்புகளுக்கு நுழைவு தேர்வு வைக்கப்படும் என்றும், பிளஸ்2 மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என யுஜிசி அறிவித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த யுஜிசி சேர்மன் ஜெகதீஷ் குமார், ”2022 23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை மத்திய பல்கலைக்கழகங்களில் மாணாக்கர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும். இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசியின்) கீழ் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும்  தேர்வு நடத்தப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது,   “தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த ரூபத்திலும் நுழைய முயற்சித்தாலும், அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார்” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்றைய விவாதத்தின்போது பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, “மத்தியப் பல்கலைக்ககழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியது: “எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார்” என்று அவர் கூறினார்.