சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம்  என்று கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைமைக்கழக செயலாளர் கே.என்.நேரு, திமுக தலைமையிலான  கூட்டணியில் அதிருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமை தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில், கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்க திமுக தலைமை நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.  மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி விவகாரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து,  அண்ணா அறிவாலயத்தில், தலைமைக்கழக செயலாளர்  கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர்  செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கே.என்.நேரு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும், கூட்டணி கட்சிகளிடையே இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றார்.  திமுகஎத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.

அப்போது செய்தியளார்கள், கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் வருகிறே என்ற கேள்விக்கு,  தனிச்சின்னம் தொடர்பாக விவகாரம்,  எங்களுக்கும் கூட்டணி கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சினை, கூட்டணி விவகாரத்தில்,  பிக் பிரதர் என்ற மனப்பான்மையுடன்  திமுக செயல்படவில்லை  என்றார்.

உதயநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லையா  என்ற கேள்விக்கு,  உதயநிதி பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என மறுத்ததுடன், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து கடுமையாக விமர்சித்தார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக வன்னியர் இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்திருக்கிறது.

இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.

திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையென கே.என்.நேரு தெரிவித்திருப்பது, கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளது. இன்று காலை திமுக – மார்க்சிஸ்ட் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமலேயே சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து உடனடியாக கட்சி நிர்வாகிகள் க்கூட்டத்தை கூட்டி விவாதமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.