சென்னை: அப்பாவி மக்கள் மீது அதிரடியாக வழக்குகளை போட்டு கைது செய்யும் தமிழ்நாடு காவல்துறை, சுமார் 46ஆயிரம் வழக்குகளில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது காவல்துறையினரின் மெத்தனத்தையும், அதிக மததையையுமே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுபோல போதைப்பொருட்கள் நடமாட்டமும் தீவிரமடைந்துள்ளது.  அதே வேளையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போதிய காவல் நிலையங்களும், காவலர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.  இருந்தாலும், அவ்வப்போது பல குற்றங்கள் தொடர்பாக ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் தொடர்பான வழக்குகளை முறையாக விசாரித்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தர வேண்டும். ஆனால், அதை காவல்துறையினர் முறையாக செய்வதில்லை. இதனால்  பல ஆயிரம்பேர் பல்வேறு சிறைச்சாலைகளில் விசாரணை கைதிகளாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக நீதிமன்றங்களில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை  போன்ற சுமார்  46,000 வழக்குகளில் காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CrPC) பிரிவு 167 -ன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறினால், அவர் இயல்பாகவே, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியும். ஒரு சில குற்றங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்.

பொதுவாக காவல்துறையில் வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிலுவையில் உள்ளவற்றைக் குறைக்கவும், அதிகாரிகளுக்குச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் தாள் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் போது, வண்ணக் குறியீடு தானாகவே பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த எச்சரிக்கிறது. காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிக்க முக்கிய ஆவணமான கேஸ் டைரி பயன்படுகிறது.

ஆனால் ஏராளமமான வழக்குகள்  விசாரணையின்றியே கிடக்கிறது. இதற்கு காரணம்,  காவலர்கள் பற்றாக்குறை,  வழக்குகளின் நிலையை ஆய்வு செய்தல், ஆய்வக மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெறுவதில் தாமதம், பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் மற்றும் விசாரணை அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பயிற்சி இல்லாதது போன்றவை என குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.