சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.
பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டு பகுதியில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரபலமான உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்த உணவகத்தில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. இதில் பத்து பேர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்ட இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் முசாவீர் மற்றும் அப்துல் மதீன் தஹ்யா என ஏற்கெனவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப ஆதாரங்களின் பின்னணிகளை கொண்டு ஆய்வு செய்தபோது, குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக கருதப்படம் முசாவீர் மற்றும் அப்துல் மதீன் தஹ்யா அவர் இருவருடனும் தொடர்பில் இருந்சத 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் ஸ்லீப்பர் செல்லாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெங்களூரில் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.