ஓரியோ பிஸ்கட் நிறுவனம் பதினோரு ஆண்டுகளுக்கு முன் 2011 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வென்றதை நினைவு கூறும் வகையில் அன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்ததை அதே நாளேட்டில் இன்று மீண்டும் விளம்பரம் செய்தது.

ஓரியோ பிஸ்கட் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுடன் இணைந்து விளம்பரத்துக்காக முதல் பக்கத்தை நாங்கள் இப்படி அமைத்திருந்தோம் என்று இரண்டாம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

முதல் பக்கத்தில் உலக கோப்பை கிரிக்கெட் செய்தி தவிர 2ஜி வழக்கு தொடர்பான செய்தியும் இடம்பெற்றிருந்தது, அதில் ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட செய்தி இடம்பெற்றிருந்தது.

செய்திகளை முந்தித்தருவதில் மட்டுமே கவனம் செலுத்தும் செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை 2ஜி செய்தியை அப்படியே தங்கள் வலைத்தளங்களில் மீண்டும் பதிவேற்றின.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜா, கனிமொழி உள்ளிட்டவர்கள் 2017 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த ஊழல் குறித்து தவறான புள்ளிவிவரங்களை அளித்ததாக முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்த விவரங்களை சரிபார்க்காமல் தப்பும் தவறுமாக, வெந்ததும் வேகாததுமாக அப்படியே பதிவேற்றிய செய்தி நிறுவனங்கள் தற்போது தங்கள் இணையதளத்தில் இருந்து அந்த செய்திகளை நீக்கி வருகின்றன.

இருந்தபோதும் விளம்பரம் என்ற பெயரில் எந்த ஒரு வரைமுறையையும் காற்றில் பறக்கவிடும் நிறுவனங்கள் மீது சமூக வலைத்தளங்களில் சாடி வருகின்றனர்.