சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீபாராதனைக்காக தங்கத்தில் புதிய 7 அடுக்கு தட்டுக்கள் கொண்ட தீபம் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இதை தில்லை எனவும் அழைப்பது வழக்கம். இங்குள்ள சிவனான நடராஜர் ஆடும் கோலத்தில் மக்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த கோவில் அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி ஆகும். இங்கு சிவன் பிரதான கடவுள் ஆவார்.

மதுரையில் மீனாட்சி அம்பாளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல் இங்கு நடராஜரான சிவனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொதுவாக வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் கை ஓங்கி உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரம் ஆட்சியா என கேலியாக கேட்பது வழக்கமாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. இது சாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும் பூஜை ஆகும். இந்த பூஜையின் போது சாமிக்கும் அம்மனுக்கும் தீபாராதனை காட்ட 7 தங்க விளக்கு அடுக்குக்கள் கொண்ட தீபாராதனை தட்டு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த தீபாராதனை தட்டு சுமார் 3 கிலோ தங்கத்தினால் செய்யபட்டுள்ளது. இந்த தீபாராதனை தட்டு மக்கள் நன்கொடையாக அளித்த தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாராதனை தட்டின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும்.