விரைவாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களை தனியாக தமிழக அரசு பிரித்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்போட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டது, உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவதற்காகவே என எதிர்கட்சிகள் தரப்பில் புகார்கள் எழுந்த நிலையில், அதனை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ”5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.