சென்னை; காலை உணவை யாரும் தவற விடக் கூடாது என்று  சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழப்புணர்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணாக்கர்களுக்கு அறிவுரை கூறினார்.

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில்,  இன்று, பள்ளி மாணவர்களுக்கு மனநலம் – உடல்நலம் விழிப்புணர்வு தொடக்க விழா நடைபெற்றது. இந்த   விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, விழிப்புணர்வு ஊர்த்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஊர்தியில் உள்ள மருத்துக்குழுவினர் பள்ளிகளுக்கு சென்று மாணாக்கர்களுக்கு தேவையான  மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  இந்த 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓரளவு மீண்டு சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுளேன். கொரோனாவில் இருந்து நான் குணமடைந்தாலும் உடல் சோர்வு சற்று இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களை பார்க்கும் போது உடல் சோர்வு பறந்து போய்விடுகிறது.

தொடர்ந்து,  நீங்கள் எல்லோரும் காலை உணவு சாப்பிட்டு விட்டீர்களா ? என்றும்  மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது சில மாணவர்கள் சாப்பிடாமல் வருவது தெரிந்தது. இதுகுறித்து வருத்தப்பட்டவர்,  மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில் தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மதியம் குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் உணவு உட்கொள்கிறோம். மாணாக்கர்கள் காலை உணவை மாணவர்கள் அவசியம் அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதுடன், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்படும் என்றவர்,  இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன் என்றார்.

நல்ல உடற்பயிற்சி, நல்ல எண்ணங்களுக்கு சுறுசுறுப்பு என்பது அடிப்படை. எதையும் சுறுசுறுப்பாக செய்யக்கூடிய உணர்வு மாணவர்களுக்கு வர வேண்டும். நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும்,  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்; உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும் என அறிவுரை கூறினார்.

இந்த விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்