மதுரை: கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது என்றும், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  தனி நீதிபதி, சாதி பாகுபாடு இன்று இணைந்து கோவில் கும்பாபிசேகத்தை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதா விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணையைத்தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், , “கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோயிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர்  உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்தே விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.