சென்னை:
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்றுள்ளார். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். நீட் தேர்வு ஆய்வுக்கு குழு நியமனத்தை எதிர்த்து பா.ஜக., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய ஆளும் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்திருந்தது. அரசு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டது மற்றொருபக்கம் பொதுமக்களிடமிருந்து இதுதொடர்பான கருத்துகளும் பெறப்பட்டன 25000க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வுக்கு எதிரானதாக இருப்பதாகவும் ஏ.கே.ராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அரசு அமைத்திருக்கும் ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீட் விவகாரத்தில் மாநில அரசு அரசியலாக்கி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் உள்ளதாகவும் நீட் குறித்து தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் ‘நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளது.
அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து ஒருவாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்றுள்ளனர்.