மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது  மேற்கு பாந்த்ரா பகுதியல் உள்ள அடுக்குமாடி  வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு பாந்த்ராவில்  உள்ள மன்னத் என்ற ஷாருக்கானின் 6 மாடி வீட்டிற்கு இன்று காலை  சுமார் 5 போதைப்பொருள் தடுப்பு  அதிகாரிகள் வந்தனர். ஆர்யன் கான் மீதான போதை மருந்து வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரிக்க அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் தனது மனைவி கவுரி கானுடன் நேரில் சந்தித்து திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்று ரெய்டு நடத்தியது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், போதை மருந்து வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயை விசாரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள், மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கினர்.

முன்னதாக  அக்டோபர் 3ஆம் தேதி கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு மாறுவேடத்தில் சென்ற போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள், நடுக்கடலில் வைத்து கப்பலில் அதிகாரிகளை சோதனை நடத்தினர். அப்போது, கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்தது தெரியவந்தது. இந்த பார்ட்டியில்  நடிகர் ஷாருக்கானின் மகனும் பங்கேற்றிருந்தார். அவரும் போதை மருந்து உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,   ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டு  மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கு வரும் 26ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், சிறையிலிருக்கும் மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்கு சென்று சந்தித்து பேசினார். இந்த நிலையில், அவரது வீட்டில் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருளுக்கு அடிமையாக உள்ளதும், பலர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் பிரபல நடிகைகளும் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\