இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் ஜகாங்கீர் தரீனுக்கு பொதுச் சேவையில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் பாகிஸ்தான் தரேக் ஈ இன்சாஃப் கட்சித்தலைவர் ஜகாங்கீர் தரீன் உட்பட பலருக்கு பொதுச் சேவையில் ஈடுபட தடை விதித்திருந்தது. இவ்வாறான தடை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து ஒரு வழக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இன்று அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில்,”பாகிஸ்தான் சட்டவிதிமுறை 62(1) F ன் படி ஒருவர் பொதுச் சேவையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டால் அது வாழ்நாள் தடை ஆகும். உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்க உத்தரவிடும் வரையில் அவர் பொது வாழ்வில் ஈடுபட முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், மற்றும் ஜகாங்கீர் தரீன் ஆகியோருக்கு அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.