சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில்,  கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர்  முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர் அவ்வப்போது சர்ச்சைகுரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்,  தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் முதல்வர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதுடன், தேசிய கொடியில் உள்ள கலர் குறித்தும் பேசியிருந்தார். அது சர்ச்சையானது.

இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் ராஜரத்தினம்  என்பவரால் புகார் மனு அளிக்கப்பட்டது.  அதில்,  தேசியகோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில், எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி, எஸ்.வி.சேகர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.