சென்னை: தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதையடுத்து, அரசின் பல துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழகஅரசு இன்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கான  அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததையடுத்து, சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அந்த பெயர்களை தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுவெளியிட்டுள்ள  அரசாணையில்,

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்படுகிறது.

வேளாண்மைத்துறை என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று மாற்றப்படுகிறது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்பது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை என்று மாற்றப்படுகிறது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்பது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது.

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்பது சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.