அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில்,  குறுமாணக்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம்.

தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்கச் சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்யத் தானும் சம்மதித்தாள்.

இதற்குள் முனிவர் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவமெடுத்தான். அகலிகை பயந்து நின்றாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் முழுவதும், ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையைக் கல்லாகும்படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க,”ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்” என்றார் முனிவர்.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறியது. இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் “கண்ணாயிரமுடையார்” ஆனார்.

மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனமூர்த்தியாகிய குறுமாணி வழிபட்டதால் இத்தலம் “குறுமாணக்குடி” எனப்படுகிறது. மூலவர் சுயம்பு மூர்த்தி. மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் தரிசனம் செய்துள்ளனர். 

திருவிழா:

கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோத்சவ திருவிழா. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல், 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம்.