இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று 2019 ம் ஆண்டு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மனு அளித்திருந்தார்.

அதேபோல், 1.84 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.வி. பிரகாஷ்க்கு ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்ததுடன் இது தொடர்பாக ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் மனு குறித்து விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.