சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்த வைத்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் நாள் அதிமுகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து,   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிமுகவினர், மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதையடுத்து,  ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு, விருதுகள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.  இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய நிலையில், சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். இந்த நிகழ்வின் போது, அதிமுக பிரபலங்கள் பலரும் உடனிருந்தனர்.