ஸ்ரீநகர்:

ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீரில் ராணுவ பாராசூட் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி யடைந்த நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து சலசலப்பு எழுந்தது. அவர் ஓய்வு பெற வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், அவர் ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், மேற்கு இந்திய தீவில் ஆட உள்ள ஆட்டங்களில் தோனியின் பெயர் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வரும் தோனி  இந்திய ராணுவத்தில் தங்கி பணிப்புரியப் போவதாக அறிவித்திருந்தார். அது தொடர்பாக ராணுவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுவும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தோனியின் கோரிக்கையை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிவின் ராவத் ஏற்றுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து  தோனிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  பாராசூட் ரெஜிமெண்ட் பயிற்சியை இந்திய ராணுவத்தினர் தர உள்ளனர்.

இதற்காக அவர் இன்னும் சில நாட்களில் காஷ்மீர் செல்லவிருக்கிறார். சுமார் 2 மாத காலம் அவர் அங்கு தங்கியிருந்து பாராசூட் பயிற்சி பெறுவார் என கூறப்படுகிறது.