டில்லி

மக்களவை உறுப்பினர் மரணம் அடைந்தால் அவை ஒத்தி  வைக்கப்படும் விதி முறைகளை சபாநாயகர் உடைத்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆளும் பாஜக அரசின் கூட்டணியில் உள்ளது. ராம்விலாஸ் பாஸ்வானின் தம்பி ராம் சந்திர பாஸ்வான் என்பவரும் தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆவார். அவர் நேற்று மரணம் அடைந்தார். மக்களவையின் அப்போதைய உறுப்பினர் மரணம் அடைந்தால் அன்றைய தின மக்களவை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவது நீண்ட நாள் வழக்கமாகும்.

ராம் சந்திர பாஸ்வான்

 

ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அந்த வழக்கத்தை உடைத்துள்ளார். அவர் சபை நடவடிக்கைகள் அப்போது ஒத்தி வைத்து விட்டு மீண்டும் மதியம் 2 மணிக்குத் தொடங்க உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் மரணமடைந்த போது சபாநாயகர் இவ்வாறு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் சவுத்ரி, திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சங்கடோ ராய் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 2017 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் அகமது மரணம் அடைந்தார். அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அன்று நிதிநிலை அறிக்கை அளிக்கும் நாள் என்பதால் அவையை ஒத்தி வைக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக மற்றொரு நாள் அவை முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டது.