மதுரை: 
கீழடியில் ASI நடத்திய அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அதன் ஆய்வு முடிவை இன்று வரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்.சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப் படுத்தும் விதமாகத் திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.அத்துடன் சங்ககாலத் துறைமுகம் முசிறி தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநில அமைந்துள்ளது. சேர நாட்டின் தொன்மை இணையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் கேரள மாநில தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைகாட்டு மற்றும் ஒரிசா மாநிலத்தில் உள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்பு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனப் பல புதிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்.சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “கீழடியில் ASI நடத்திய அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அதன் ஆய்வு முடிவை இன்று வரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை .கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு முடிவைத் தமிழக அரசு கம்பீரத்தோடு அறிவித்திருக்கிறது. இதுவும் இருவேறு நாகரிகத்தின் வெளிப்பாடுதான்” என்று பதிவிட்டுள்ளார்.