4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய் குறித்த செய்தி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் இவரது மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இறக்கும் தருவாயில் தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, ஜனனியின் தாய் பூரணம் தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.

கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் இந்த நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கனரா வங்கியில் வேலை பார்த்த தனது கணவர் உக்கிரபாண்டியை இழந்த பூரணத்துக்கு வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை கிடைத்ததை அடுத்து தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.