சென்னை: தமிழ்நாட்டில்  டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் தீவிரத்துக்கு சிலர் பலியாகி உள்ள நிலையில், இதுவரை 600க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனைகளில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப் படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ‘ஏடிஸ்’ என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.‘ `ஏடிஸ்’ கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.”

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, அதிக காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.

தமிழ்நாடு அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.  இருந்தாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளும்ப வெளியாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இ டெங்கு பரவலை தடுக்க வரும் ஞாயிறன்று சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போதைய நிலையில், டெங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆக பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே   கடந்த ஜனவரியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது. அப்போது,  866 பேர் பாதிக்கப்பட்னர். மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு பரவல் தடுக்கப்பட்டு,  பிப்ரவரி மாதம் 641 ஆக குறைந்தது. பின்னர் மார்ச் மாதம் 512 பேரும், ஏப்ரல் மாதம் 302 பேரும், மே மாதம் 271 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு முதல் மீண்டும் டெங்கு பரவல் தீவிரமடைந்து வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் 535 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!