சென்னை:  தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1ந்தேதி)  மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும்   டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.  இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு  மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட ஒருசிலர் மரணத்தை தழுவி உள்ளனர். இதனால்,   டெங்கு பரவலை தடுக்க, கொசு ஒழிப்பு பணிகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க  தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என  தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.