சென்னை

மிழகத்தில் கோவில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இன்று சென்னை வேப்பேரியில் உள்ள பி கே என் அரங்கத்தில் நடந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இந்து அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு உள்ளிட்டோர் கல்ந்துக் கொண்டனர்.  இந்த நிகழ்வில் தமிழக் கோவில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு, “கடந்த 2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு செலுத்தும் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் 5.9.2021 முதல் அனைத்துத் திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  தவிர, 7.9.2021 அன்று சட்டப்பேரவையில்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், திருக்கோயில்களில் பணிபுரியும் தலைமுடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதையொட்டி  திருக்கோயில்களில் பணிபுரியும் 1,744 முடி திருத்தும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகை அந்தந்தத் திருக்கோயில்களிலிருந்து வழங்கப்படும்.  ஆண்டொன்றுக்கு இதற்காக ரூ.10.47 கோடி செலவிடப்படும்.  திருக்கோயில் முடிதிருத்தும் பணியாளர்களின் வாழ்வாதாரம் இதனால் மேம்படும்” என அறிவித்துள்ளது.