சென்னை:கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதி உதவி  திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.4ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் நிலையில், மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், வாழ்வாதாரம் இழந்த கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிவுற்ற 1000 கலைஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்து, 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை, இனிமேல் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் – கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.6.2021) தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்.

இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/-த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திருமதி வ.கலையரசி, இ.ஆ.ப.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு. தேவா, உறுப்பினர் செயலாளர் திரு. தங்கவேலு, இ.ஆ.ப.(ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.