சென்னை

டகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது.

விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.  இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு கோரி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.  தமிழக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி எழுதிய இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டத்தில் 13 பணிகளுக்கு 2.50 கோடியும். கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில் 14 பணிகளுக்கு 2.40 கோடியும், ஆரணியாறு வடிநில கோட்டத்தில் 12 பணிகளுக்கு 2.40 கோடியும், கிருஷ்ணா குடிநீர் விநியோக திட்டத்தில் 3 பணிகளுக்கு 50 லட்சம், கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 32 பணிகளுக்கு 2.40 கோடியும், வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 21 பணிகளுக்கு 1.50 கோடி என மொத்தம் 95 பணிகளுக்கு 11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியில் சென்னையின் முக்கிய நீர் வழித்தடங்களான கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் பணி நடைபெற உள்ளது.   இங்கு தண்ணீர் செல்வதைத் தடை செய்யும் தேங்காய் மட்டை, திடக்கழிவு, தாவரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவது, அடைப்புகளைச் சரி செய்வது,  வண்டல் மண்ணை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்குக் குறுகிய கால டெண்டர் விட்டு, விரைந்து இப்பணிகளைத் தொடங்க நீர்வளத்துறைத் திட்டமிட்டுள்ளது.